Thursday, January 23, 2014

முதல் பெண் போராளி


ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் விடுதலை போராளி வீரமங்கை ராணி வேலுநாச்சியார் ஜான்சி ராணிக்கு முன்பே வாழ்ந்தவர். அதுவும் நாம் பிறந்த சிவகங்கை மண்ணிலே விவேகம் நிறைந்த வீரத்தோடு வாழ்ந்து மடிந்த இந்த வீரமங்கையை பற்றி ஒரு சிறு வரலாற்றுத் தொகுப்பு…

முக்கியமாக ஒரு பெண் வீரம் மட்டுமின்றி விவேகத்துடனும் செயல்பட்டதற்கு நடந்த முக்கிமான நிகழ்ச்சி இவரின் வரலாற்றை படிக்கும் நம்மை புல்லரிக்கச் செய்கிறது…

நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாத கற்பனையில், திறம்பட புத்திக் கூர்மையாக சிந்தித்து, மனித வெடிகுண்டாக ஒரு பணிப்பெண்ணை, சிவகெங்கை அரண்மனை கோட்டைக்குள் இருக்கும் வெள்ளையரின் ஆயுதக் கிடங்கிற்குள் அனுப்பி அவற்றை முழுவதுமாக அழித்தார் என்ற செய்தி வரலாற்றை புரட்டும் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது.

அதுவும் ஆங்கிலேயரை எதிர்க்க எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து தனது படை பலத்தை சக்தி மிக்கதாக மாற்றினார் என்பதும், 18ம்நூற்றாண்டில் ஒரு பெண்ணால் இவை எல்லாம் சாத்தியமா என்பதெல்லாம் நம்மை மூச்சு முட்ட சிந்திக்க வைக்கிறது…

இராணி வேலு நாச்சியார் படிமம், தோராயமாக கி.பி 1792
  • ஆட்சிக்காலம்
கி.பி 1780- கி.பி 1783
  • முடிசூட்டு விழா
கி.பி 1780
  • பிறப்பு
1730
  • பிறப்பிடம்
இராமநாதபுரம்
  • இறப்பு
25 டிசம்பர், 1796
  • முன்னிருந்தவர்
முத்து வடுகநாதர்
  • அரச வம்சம்
சேது மன்னர்
  • பெற்றோர்
செல்லமுத்து சேதுபதி - முத்தாத்தாள் நாச்சியார்


வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை சுருக்கம்:

இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊரில் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி(முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி) – முத்தாத்தாள் நாச்சியாருக்கு ஒரே பெண் மகவாக வேலுநாச்சியார் பிறந்தார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார்.

வேலுநாச்சியார் வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். தந்தை செல்லமுத்து சேதுபதி தன் மகளுக்குப் போர்க்களம் சென்று வாளெடுத்துப் போர் புரியும் பயிற்சி அளித்து ஒரு சிறந்த வீராங்கனையாகவே வளர்த்தார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் சிறந்து விளங்கினார்.பத்து மொழிகள் திறம்பட அறிந்திருந்தார். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலு நாச்சியாரின் வீரத்திலும், அழகிலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை 1746ம் வருடம் மணமுடித்து மனைவியானார்.

ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கையாக இருந்தது.நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன.
அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப். ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.
வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து இறந்து கிடந்தார்கள்.கதறி அழுதார் நாச்சியார். கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்கியே தீரவேண்டும் என சபதமேற்றார்.

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி.

அப்போது வேலுநச்சியார் சார்பாக தாண்டவராயப் பிள்ளை அன்றைய மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு ஒரு கடிதம் எழுதி அதில் ஹைதர் அலி தன்னிடமிருந்து 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும் அனுப்பி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து நவாப்புக்கு எதிராகப் போரிட்டு இராமநாதபுரம் மற்றும் சிவகங்கைச் சீமை ஆகியவற்றை ஆற்காடு நவாப் வசமிருந்து மீட்க முடியும் என நம்பிக்கை தெரிவித்து உதவி கோரினார்.

அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?” என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார். உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையையும், அவரிடமிருந்த வீரத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது.
சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.

விஜயதசமி,நவராத்திரி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் புகுந்து அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

பின்னொரு நாளில் வேலுநாச்சியாரின் படையின் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து தானெடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து சிவகங்கைச் சீமையைச் செம்மையாக வைத்திருந்தார்.ராணி வேலுநாச்சியார்

பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார்.தன் கணவரை ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆக்கிரமிப்பாளர்களுக்குக் காளையார் கோவில் போரில் காவு கொடுத்து விட்டு, துவண்டு போய் மூலையில் அமர்ந்து விடாமல் சிவகங்கைச் சீமையை மீட்டெடுக்கப் போராடிய இந்த வீரமங்கையின் சிலை மருது சகோதரர்கள் சிலைகளுடன், காளையார் கோவில் சிற்பத்தில் கம்பீரமாய் நிற்கிறது.
வேலு நாச்சியாருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

முதல் பெண் போராளி

ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் விடுதலை போராளி வீரமங்கை ராணி வேலுநாச்சியார் ஜான்சி ராணிக்கு முன்பே வாழ்ந்தவர். அதுவும் நாம் பி றந்த சிவகங...